Wednesday 7 September 2016

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 4


அந்த காலத்தில் மிகப் பெரிய அக்ரகாரம் இருந்தது. அற்புதமான மனிதர்கள் இருந்தனர். அத்தனை பேரும் கூண்டோடு அழிந்து விட்டார்கள். ஒரு சமயம், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அக்ரமங்கள் சற்று அதிகமாக போன போது, ஒரு பிரளயம் ஏற்படவேண்டும் என்று தீர்மானித்து தாமிரபரணியில், யாமே வெள்ளப் பெருக்கை உண்டாக்கினோம். அதன் காரணமாக பொல்லாத நபர்களெல்லாம், ஏறத்தாழ, ஒரு லட்சத்திற்கு மேல் அழிந்து விட்டனர். 

இந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் அருமையான இடம். அவ்வளவு தெய்வ அம்சம் பொருந்திய இடம். தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது. இந்த நதி இந்த இடத்தில் தான் புனிதம் கெட்டுவிடவில்லை. இப்பொழுது கூட, அகத்தியன் இந்த வார்த்தையை சொல்லுகிறபோது, தாமிரபரணி நதி பக்கத்தில் உட்கார்ந்து, காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறாளடா. அந்த அனுபவம் கண் மூடி த்யானித்துப் பார்த்தால், புல்லரிக்கும், புல்லரிக்கின்ற குளிர்ச்சி பரவும். அப்படி பரவும் குளிர்ச்சி கூட தாமிரபரணி உங்களுக்கு கொடுக்கிற வாழ்த்துக்கள் என்று எண்ணிக்கொள். வானமே இந்த நல்லதொரு நாளில் தானே விரும்பி வந்து அமர்ந்திருக்கிறது. வானத்துக்கு பலம் மேகம், அந்த மேகத்துக்கு அதிபதி வருண பகவான். இதோ இங்கு பக்கத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். அது மட்டுமல்ல, திரும்பி பார்க்கிறேன். என் அப்பன் அனுமன் அதோ ஓரத்தில் கை கூப்பி, வாய் பொத்தி; என்ன தாசச்ய வினயத்தோடு உட்கார்ந்திருக்கிறார். என் கண்ணுக்கு தெரிவதெல்லாம் உங்களுக்கு சொல்லுகிறேன்.  நீங்களும் முடிந்தால் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள். அகத்தியன் சொல்லை மட்டும் கேளுங்கள். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால் அந்த காட்சி உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும். ஏன் என்றால் தெய்வங்கள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிற நேரம்.  ஒரு சமயத்தில்,ஆஞ்சநேயர் வந்து ராமபிரானோடு இந்த தாமிரபரணி நதிக்கரையில் நீராடி, அமர்ந்து, மனம் விட்டு பேசி, நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தமாக இருந்த இடம். ராமர் சிரித்தது அபூர்வம். ராமர் வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து, கடைசி வரை எடுத்துப் பார்த்தால், வாழ்க்கை எல்லாம் ரொம்ப சோகம். ஆனால் எல்லாம் சோகமாக இருந்தால் கூட, அத்தனை பேர்களும் "ராமஜயம்" என்று எழுதுகிறோமே தவிர " கிருஷ்ண ஜெயம்" என்று எழுதுவதில்லை.  வேறு எந்த  ஜெயமும் எழுதுவதில்லை. "ஹயக்ரீவர் ஜெயமும்" எழுதுவதில்லை. ராமர் அப்படிப்பட்ட ராமர். ராமரின் மறு அவதாரமாக, பச்சை வண்ணன் இதோ அமர்ந்திருக்கிறான். சிலையாக அமர்ந்த நாளும் இந்த  நாள் என்று ஏற்கனவே சொன்னேன். அந்த நாள் திரும்ப ஞாபகத்துக்கு வருவதால் அதையே சொன்னேன். சிறப்பு மிக்க புண்ணிய பூமியில் இன்றைய தினம் அமர்ந்திருக்கிறோம். ஒருவன் தெய்வத்துக்காக செய்கின்ற காரியங்களுக்கு எல்லாம், அவன் மூன்று ஜென்மமாய் குடும்பம் நன்றாக தழைக்கும். அவர்கள் செய்த பாபங்கள் அத்தனையும் தூள் தூளாகும். அவன் குடும்பம் முன்னூறு ஆண்டுகளாய் இன்னும் சீர் பெற்று, சிறப்பு பெற்று வாழும். நாகலிங்கத்தைப் பற்றிச்சொன்னேன். ஆதிசேஷன் அவதாரம் தான், என்று ஆதிசேஷன் சொல்ல வேண்டும். ஏன் என்றால் இங்கு கருடனுக்குத்தான் பால் அபிஷேகம். பாம்புக்கு அல்ல. ஆக, பாம்புக்கு சமமான கோபத்துடன், இங்கிருந்து ஆட்சி செய்ததினால் தான், இன்றைக்கும் கார்கோடகன் என்றால் அவ்வாறு எண்ணுகிறார்கள்.

ஆனால் ஒரு தீமை வந்தால் தான் ஒரு நன்மை விளையும் என்பதற்கு அன்றைக்கே ஒரு உதாரணம் ஆக இருந்தவன் தான் கார்கோடகன். கருட பகவானும் இங்கு பக்கத்திலே அமர்ந்திருக்கிறான். அவன் பக்கத்திலேயே ஆதிசேஷனும் அமர்ந்திருக்கிறான். என்ன ஒற்றுமை பார்த்தாயா! மனிதர்களுக்குத்தான் பகைமை உண்டு. தேவர்களுக்கு பகைமை இல்லை. அவர்களுக்கும் பிளவு உண்டு, அதை தாண்டித்தான் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இங்கு இராவணன் அவதாரம் என்பதில், இராவணன் கொல்லப்பட்டான் என்று சொல்கிறார்கள். இராவணன் கொல்லப்படவில்லை. இராவணன் போல் இருப்பவன் கொல்லப்படவேண்டும், தர்மம் செழிக்கவேண்டும் என்பதற்காகத்தான். அன்றும் ஆதிசேஷன் பக்கத்தில் அமர்ந்திருந்தான். இங்கே கருடாழ்வாரும் பக்கத்தில் அமர்ந்து, பெருமாளை கண் கொட்டாமல் ஆனந்தமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த அரிய காட்சிகளை எங்கு சென்றாலும் காணமுடியாது. ஆக, இரு துருவங்கள் ஒன்று சேர்ந்து, பகவானை, அதாவது விஷ்ணுவை, கை கூப்பி வணங்குகிற காட்சி இப்பொழுது பார்க்கிறேன். இந்த அருமையான நாள், அகத்தியனுக்கு உகந்த நாள். ஆகவேதான் அகத்தியன் உங்களை இங்கு வரச்சொன்னேன். அகத்தியன் விஷ்ணுவாகவும் இருக்கிறேன், பிரம்மாவாகவும் இருக்கிறேன், சிவனாகவும் இருக்கிறேன். ஆகவே, எனக்கு நடமாடும் இடமே இந்த பொதிகை மலை தானடா. இப்பொழுதுதான் பொதிகை மலையிலிருந்து பேசிவிட்டு வந்தேன். இப்பொழுது உங்கள் பக்கத்திலிருந்து அமர்ந்து கொண்டுதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என்னுடன் இங்கு இருக்கின்ற அத்தனை பேர்களுமே, சதுரகிரிக்கு போக விரும்பினார்கள். சதுரகிரி இருக்கும் திசை நோக்கி வணங்கினால், அங்கிருக்கும் சித்தர்கள் அனைவருமே இங்கிருந்து, ஆசிர்வதிக்கும் காட்சியை எனக்கு காண முடிகிறது. ஆக எல்லா தெய்வங்களும், எல்லா மனிதர்களும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் யார் யார் அகத்தியனை வணங்கி வந்தார்களோ, எவர் எவர், இந்த பச்சை வண்ணனை வணங்கி சேவை செய்தார்களோ, அவர்களுக்குத்தாண்டா இந்த கோடகநல்லூர்ருக்கு அகத்தியன் வரவேற்று, அவர்கள் செய்த பாபங்களில் 33 விழுக்காடுகளை விலக்கியிருக்கிறேன். ஏற்கனவே புண்ணியத்தையும் தந்திருக்கிறேன். இப்பொழுது கடைசியாக, அவர்கள் செய்த பாபங்கள், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ செய்த பாபங்கள், விதியின் செயலால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மனிதர்கள் தானே, சற்று நிறம் மாறியிருப்பார்கள். குணம் மாறியிருப்பார்கள். வாக்கில், நாக்கில் நரம்பில்லை. எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். புண்பட நடந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் தாண்டி இவர்களுக்கு, இன்றைய தினம் மிகப்பெரிய புண்ணியத்தை, 33 சதவிகித புண்ணியத்தை என் அருமை தாமிரபரணி நதியே அவள் சார்பாக அவர்களுக்கு வழங்குகிறாள். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். தாமிரபரணி நதி எப்படிப்பட்ட  நதி என்று சொல்லியிருக்கிறேன், கங்கையின் பாபம் போன நதி. அவளே தன் கைப்பட சொல்லுகிறாள், "என்னால் ஆனதை இங்குள்ள அனைவருக்கும் 33 விழுக்காடுகள் தருகிறேன்". இன்று முதல் நீ எடுத்துப்பார். உதிரத்தை கூட எடுத்து விஞ்சான ரீதியில் சோதனை செய்து பார். அங்கொரு வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் தான் இந்த தாமிரபரணி நதிக்கரை. ஆசியோடு உங்களுக்கு கொடுத்த புண்ணியம். அந்த புண்ணியத்தை வாங்கிக்கொள். இன்று முதல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா க்ஷேமமும் கிடைக்கட்டும். நல்லதொரு வாழ்க்கை அமையட்டும். கடந்தகால வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கை தொடங்கட்டும், என்று இந்த கோடகநல்லூர் விஷ்ணுவின் சார்பில், என்னுடன் இருக்கின்ற 204 சித்தர்கள் சார்பில், முனி புங்கவர் ஜமதக்னி வந்திருக்கிறார். ஜமதக்னி யார். எவ்வளவு பெரிய மகான். கங்கை நதிக்கரையில், பூமிக்கடியில் 4000 ஆண்டுகளாக தவம் செய்கின்ற மாமுனி. அவரும் இதோ வந்திருக்கிறார். அன்னவனுக்கு, அகத்தியன் தண்டம் இட்டு சமர்ப்பிக்கிறேன். முனிவர்கள் போற்றுதல் என்பது இயலாத காரியம். அவரின் நல்லதொரு வாக்கை உங்களுக்கு வாங்கி தருகிறேன். நீங்களெல்லாம் கடும் தவம் செய்து காட்டிலே, தண்ணீர் கூட இல்லாமல், பல ஆண்டுகள் ஜபம் செய்து தவத்தை செய்திருக்கவேண்டும். உங்கள் மேல் புற்று வந்திருக்கவேண்டும். புற்றாகி இருந்து கூட நீங்கள் ஜபத்தை செய்திருக்க வேண்டும். அப்படி செய்தவர்களுக்குத்தான் மோக்ஷம் கிட்டும். மோக்ஷ உலகம் கிடைக்கும். வைகுண்ட பதவி கிடைக்கும். ஆனால் ஜமதக்னி போன்ற முனிவர்கள் எல்லாம் அருள் கூர்ந்து வாழ்த்துவதை கண்கூடாக நான் காண்கிறேன். ஆக, அகத்தியனுகல்ல அந்த வாழ்த்து, இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்குத்தான். இந்த கோடக நல்லூரிலே, ஆன்மீக பணி செய்கின்ற அத்தனை பேர்களுக்கும், உயிர்களுக்கும் அந்த அருள் போய் சேரும். இங்கு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, இன்றைய தினம் மிகப் பெரிய பரிசு போல, அகத்தியன் யான் விரும்புவதெல்லாம், இங்குள்ளவர்களுக்கு எல்லாம் நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும். இனியது நடக்கவேண்டும். இயலாமை போகவேண்டும். கோபம் ஒழிய வேண்டும். மனதில் புண்ணியமது செழிக்கவேண்டும். அதுமட்டுமல்ல, ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறேன். நிறைய பேருக்கு தெரியாது. இங்குள்ள பலருக்கு எதிர் காலத்தில், மறு பிறவி இல்லை என்பது உண்மை. அந்த நல்லதொரு வாழ்த்தையும், விதிமகளின் சார்பாக அகத்தியன் உங்களுக்கு அளிக்கிறேன். யார் அந்த மறு பிறவி இல்லாதார்வர்கள் என்று இப்பொழுது சொல்ல மாட்டேன். காரணம் உங்களுகெல்லாம் உடனே திமிர் வந்துவிடும். ஆகா! எனக்குத்தான் மறு பிறவி இல்லையே, நான் எந்த தப்பும் செய்யலாம் என்று தோன்றிவிடும். ஆகவே, சற்று அடக்கமாக சொல்கிறேன். இங்குள்ள பலருக்கு மறுபிறவி இல்லாமல் அகத்தியன் பார்த்துக்கொள்கிறேன். செய்த பாபங்களுக்கு மோக்ஷத்தை தருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். 

என் அருமை லோபமுத்திரா என்று சொல்லக்கூடிய தாமிரபரணி நதிக்கரை உங்களுக்கு 33 விழுக்காடு புண்ணியத்தை தந்திருக்கிறாள். ஆக ஏற்கனவே அகத்தியன் கொடுத்த புண்ணியம், தாமிரபரணி நதி கொடுத்த புண்ணியம், அபிஷேகம் நடந்த அற்புதமான நாள் இது. இதே நாளில் தான் நீங்கள் அனைவருமே, அந்த அற்புத சம்பவம் நடந்ததை கண்ணால் பார்த்திருக்கிறீர்கள். நான் சொன்னேனே பல சம்பவங்கள். அத்தனை சம்பவத்தை கண்ணாலே பார்த்த புண்ணியம் உங்களுக்கு இருந்திருக்கிறது. அதனால் தான் இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது, என்று சொல்லி, எல்லாம், எல்லோரும் வளமுடன் வாழ்க என அருளாசி.

நிறைவு பெற்றது!

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 3

ஆக, இந்த பூமி என்பது சித்தர்கள் நடமாடிய இடம், முனிவர்கள், முனி புங்கவர்கள் நடமாடிய இடம்.  மகா புருஷர்கள், தாமிரபரணியில் நீராடி, தங்கள் பாபத்தை போக்கிக்கொண்ட இடம். சற்று சில நாட்களுக்கு முன்பு, இதே அகத்தியன், நம்பி மலையில் இரவு 12 மணிக்கு நாடி படிக்கச் சொன்னேன். அங்கே ஒரு விஷயத்தை சொன்னேன். உங்களுகெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் மறுபடியும் சொல்வதால் தவறில்லை. ஏன் என்றால், எத்தகைய, வளமான புண்ணிய நதி இந்த தாமிரபரணி என்பது உங்களுகெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அதற்காக சொல்கிறேன்.

அன்றொருநாள், அத்தனை பாபங்களையும் சுமந்த மனிதர்கள் அனைவரும், அந்தந்த நாட்டிலுள்ள எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடினர். கங்கையில் பலர், கோதாவரியில் பலர், யமுனையில் பலர், வைகையில் பலர் என்று நீராடி தங்கள் பாபத்தை போக்கினர். கடைசியில், எல்லா நதிகளும் சேர்ந்து, "எல்லா மனிதர்களும் குளித்ததினால் அத்தனை பாபமும் எங்களிடம் சேர்ந்துவிட்டது. நாங்கள் எங்கு போய் பாபத்தை தொலைப்போம்" என்று கேட்ட பொழுது, கங்கையில் போய் குளியுங்கள், அந்த பாபம் கரைந்து போகும் என்றார் விஷ்ணு. இதை சிவபெருமானும் ஆமோதித்தார். பிரம்மாவோ "ஆமாம் ஆமாம்"  "ததாஸ்து" என்றார். அப்பொழுது எல்லா நதிகளும் கங்கையில் நீராடி குளிக்கவும், கங்கையே பாபமாயிற்று. அப்பொழுது கங்கை ஓடி வந்து அழுதாள் அகத்தியனிடம். 

"அகத்தியா! அகத்தியா! என்னிடம் எல்லா பாபங்களையும் கொட்டிவிட்டு போகிறார்களே. இவர்கள் இன்னும் பாபங்களை செய்து விட்டு மறுபடியும் என் மீது கொட்டுவார்களே! இதெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் இல்லையே. என்னை தலையில் வைத்துக் கொண்டிருக்கும் சிவபெருமான் ​என்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நீயாவது என்னை கண்டு கொள்ளக்கூடாதா! பாபத்தை போக்கக்கூடாதா?" என்று அன்று ஒருநாள் கேட்டாள். 

அப்பொழுது அகத்தியன் சொன்னேன்,"அஞ்சிடாதே! எமது தாமிரபரணி நதிக்கரையில் வந்து தாமிரபரணியில் நீராடும் போது உன் சகோதரி, உன் அத்தனை பாபத்தையும் எடுத்துக் கொள்வாள்" என்று சொன்னேன்.

அப்பொழுது கங்கை கேட்டாள் "என் பாபத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால், தாமிரபரணி அத்தனை பாபத்தை என்ன செய்வாள்?" என்றாள்.

"அதை நான் போக்கி விடுகிறேன்! எனக்கு அந்த சக்தி உள்ளது"  என்று சொல்லிய அந்த நாள் இந்த நாள்தான்.

அதைத்தான் அன்றொரு நாள் நம்பிமலையில், நடு இரவில், ஆங்கோர் வாக்குரைக்கும் போது சொன்னேன், "இன்றைய தினம் நம்பிமலையில் ஆற்றில் கங்கை வந்து நீராடி விட்டு சென்று இருக்கிறாள். கீழே இறங்கி பாருங்கள், கீழே வட்டப் பாறையில் அவள் மஞ்சள் பூசி குளித்த மஞ்சள் கூட இருக்கும்" என்று சொன்னேன்.

மறு நாள் காலை சென்று பார்த்தார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது என்று சொன்னார்கள். இது அகத்தியர் செய்யும் ஆச்சரியம் அல்ல. இதுவரை காணப்படாத மஞ்சள் துண்டு அந்தப் பாறையில் எப்படி வந்தது? எந்தப் பெண்ணாலும் அங்கு செல்ல முடியாது, நீராட முடியாது. ஆதிவாசிகளாக இருந்தாலும் கூட பண்ண முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கங்கை அங்கு வந்து மஞ்சள் நீராடி பாபத்தை போக்கிக் கொண்ட நம்பியாறு, தாமிரபரணி சிற்றாறு. ஆக நதியின் பெருமையை பற்றி சொன்னேன். அந்த நதியில் ஒருமுறை நீராடினால் போதும், அத்தனை தோஷங்களும் போகும். கங்கையே நீராடிய நாள், நல்ல நாள், கங்கை அகத்தியன் உபதேசம் பெற்ற நாள். அகத்தியன் உபதேசம் பெற்ற கங்கை நடந்து வந்து, இந்த தாமிரபரணியில் நீராடுவதற்கு முன்பாக இந்த கோடகநல்லூருக்கு வந்தாள். அங்கு தான் விசேஷம் இருக்கிறது. இதை அன்றைக்கே, அடுத்த நாள் காலையில், நம்பி மலையில் சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன். ஏதோ ஒன்று உறுத்தல், ஏதேனும்  நடந்துவிடலாம், நாளை மன நிலை என்ன ஆகுமோ. எல்லோருக்கும் இதை கேட்கக் கூடிய பாக்கியம் இருக்கிறதோ இல்லையோ. யாம் அறியேன். ஆகவே தான் இப்பொழுதே சொல்கிறேன். இந்த கோடகநல்லுருக்கு கங்கை வந்தாள். தாமிர பரணியில் நீராடி தபசு செய்த இடம் தான், நீங்கள் அமர்ந்திருக்கின்ற இந்த இடம். இதே ஓரத்தில் தான் கங்கை என்ற புண்ணிய நதி தன் தபசு கோலத்தில் உட்கார்ந்து தன் பாபத்தை போக்க வந்த இடம்தான் இந்த கோடக நல்லூர். ஏற்கனவே இன்னொரு சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. இந்த தாமிரபரணி நதிக்கரை பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன். இந்த ஊருக்கு சற்று தொலைவில் இருக்கிறது, கரும்குளம் என்ற அற்புதமான ஊர். ஏற்கனவே பலருக்கு சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால் ஒரு சிலருக்கு இன்னும் தெரியாது என்பதற்காக சொல்ல விரும்புகிறேன். அன்றொருநாள், அகலிகையால் சாபம் விடப்பட்ட இந்திரன் உடம்பெல்லாம் நோயுற்று திண்டாடி துடித்திருக்கும் போது "என் பாபத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்" என முக்கண்ணனிடம் கேட்ட பொழுது, எல்லா தெய்வங்களும் கண்ணை மூடிக்கொண்டு அகத்தியனை கை காட்டி விட்டார்கள். அப்பொழுது அகத்தியன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.  இந்திரா கவலைப்படாதே! உனக்குள்ள நோயை தீர்ப்பதற்கு கருங்குளத்திற்கு வா. அங்குள்ள தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி, அங்கமர்ந்து கொள். தண்ணீருக்குள் 37 நிமிடம் உட்கார்ந்து கொள். நவக்ரகங்கள்  தம்பதிகளாக வருவார்கள்.அங்கு வந்து நவக்ரகங்கள் தம்பதிகளாக வந்து ஆசிர்வதிப்பார்கள். அதில் நீராடிவிட்டு, அப்படியே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய். உன் தோஷம் எல்லாம் போகும் என்று சொன்னேன். இந்திரன், இதே ஸ்ரீவைகுண்டம் என்கிற புண்ணிய தலத்துக்கு வந்து அந்த நதியில் அகத்தியன் சொன்னபடி நீராடி, கண்ணை விழிக்கிறான், நவக்ரகங்கள் தம்பதிகளாக காட்சி கொடுக்கின்ற முதல் இடம், இன்றுவரை வேறு எங்கும் இல்லை, கரும்குளமே. அந்த கருங்குளத்தில் தான் இன்றைக்கும் கூட தம்பதிகளாய் இருக்கிற நவக்ரகங்கள் இருக்கிறது. அது ஆண்டு வரலாறு பலப் பல. நவக்ரகங்கள் தம்பதிகளாக ஒன்று சேர்ந்து காட்சி கொடுத்த நிகழ்ச்சி வேறு எங்காவது உண்டா! இதற்குப் பிறகுதான் மற்ற கோவில்களில் ஆரம்பித்திருக்கிறார்களே தவிர, முதலிடம், கருங்குளம்தான். தம்பதிகள் அகத்தியன் சொல்படி கேட்டு, அகத்தியன் யாம் அங்கிருந்தேன், இந்திரன் வந்தான், நதியில் நீராடிவிட்டு அப்படியே நமஸ்காரம் பண்ணினான். அவன் அத்தனை தோஷங்களும், அகலிகையால் ஏற்பட்ட தோஷங்கள், விச்வாமித்ரரால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கியது. அந்த நாளும் இந்த நாள் தான். மேலும் இந்த நாளை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பல மணிகணக்காக சொல்லிக்கொண்டே போகலாம். வரலாறு தெரியாதவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களாக சட்டத்தை போட்டுக் கொள்வது மனிதர்கள் தானடா! இவர்களுக்கு என்ன தெரியும் சட்டத்தைப் பற்றி. ஆகம விதியை பற்றி ஏதாவது தெரியுமா? எத்தனை விஷயங்களை கண்டு கொண்டாலும், இன்னும் மனிதர்களுக்கு புரியவில்லை. இன்னும் தெரியவில்லை. இவர்கள், ரத்தமும், சதையும் நன்றாக இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் பேசலாம், பாராட்டலாம். ஆகவே, அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, இறைவன் நமக்கு நல்லது செய்திருக்கிறான், நல்ல வாக்கு கொடுத்திருக்கிறான். நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறான். அதற்கு நன்றி சொல்லவேண்டிய நல்ல நாள் இந்த நாள் தான். இந்த புனிதமான ஸ்தலத்துக்கு வந்த பிறகாவது, இனி புத்தி திருந்தி கொள்ளட்டும். இஷ்டப்படி வைப்பதெல்லாம் சட்டம், என்பதை தூக்கி எறியட்டும். மனிதர்களின் ஆத்மா, தெய்வமே. எல்லா ஆத்மாக்களுக்குள்ளும், தெய்வம் இருக்கிறது. அகத்தியன் எந்த ஆத்மாவையும் குறை சொல்லி பேசியது கிடையாது. எல்லோரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன். உன் முன் அமர்ந்திருப்பவன் உன்னை விட பாக்கியசாலியாக இருந்திருக்கலாம், உன்னை விட புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். அவனது ஏழ்மையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ சற்று கோபப்பட்டு இருக்கலாம். பேசத்தெரியாமல் பேசியிருக்கலாம். அவனை, அவன் பேசியதை மன்னித்துவிடு. என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். இன்னமும் அவர்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் மறுபடியும் சொல்ல வேண்டும் அல்லவா. ஆகவே புனிதமான நாள், புனிதமான இடம். இந்த இடத்திலே, நாக பிரதிஷ்டை அகத்தியன் சொல்லி, அது நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் ஆக இருந்து வருபவர்கள் 1547 ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர்கள். ஒன்றே ஒன்று சொல்வேன். இவர்கள் சும்மா இந்த கோவிலுக்கு சேவை செய்ய வரவில்லை. முன் ஜென்மத்து தொடர்பு இருக்கிறது. இவர்களுக்கு, குலோத்துங்க சோழனும், குலோத்துங்க பாண்டியனும், வர்த்தமான் பாண்டியனும் எழுதி வைத்த செப்புப் பட்டயம் இன்றும் இருக்கிறது. கோவிலின் வட கிழக்கு திசையில், 40 அடிக்கு கீழே 6 செப்புத் தகடுகள் இருக்கிறது. என் கணக்குப்படி இங்கு சுற்று புறத்தில் 40 மைல் அளவுக்கு இந்த கோவிலுக்கு எழுதி வைத்த சொத்துக்கள் உண்டு. அப்படி இந்த கோவிலை நிர்வாகித்து வந்தவர்கள் தான், அடுத்த பிறவி, அடுத்த பிறவி என எடுத்து இப்பொழுதும் நிர்வாகித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு கைங்கரியம் செய்பவர்களுக்கு அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் இருக்கிறது. யார் யார் இந்த கோவிலுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார்களோ, யார் யார் ஆத்மார்த்தமாக அபிஷேகம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கும் முன் ஜென்ம தொடர்பு உண்டு. இல்லையென்றால் அகத்தியன் இங்கு வந்து ஒரு வாக்கு உரைக்க மாட்டேன். அனைவருக்கும் நிறைய சொத்து சுகம் உண்டு, இன்றும் இருக்கிறது; ஆனால் மறைந்து இருக்கிறது.

தொடரும்!

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 2

அதற்கு முன்னால் பச்சைக்கும்  விஷ்ணுவுக்கும் சம்பந்தம் கிடையாது. புதனுக்கும், விஷ்ணுவுக்கும் சம்பந்தம் இருந்ததாக வரலாறே இல்லை. அத்தனையும் தாண்டித்தான், பச்சை என்றால் விஷ்ணு. விஷ்ணு யாரிடம் இருக்கிறாரோ அவனை விஷம் அண்டாது, அதற்கு கார்கோடகன் தான் ஒரு காரணம். ஏறத்தாழ 727 ஆண்டுகள் அந்த கார்கோடகன் ஆட்சி செய்த இடம், இது. ஏகப்பட்ட பேருக்கு தொல்லை கொடுத்த இடம். தன் பக்கம், இந்தப் பக்கமாக நல்லவர்கள் யாருமே வரக்கூடாது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்த இடம். தவமுனி தன் குழந்தை இறந்து விட்ட காரணத்தினால் கண்ணீர் விட்டு அழுத போது, கருடப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த இடம். எங்காவது, கருடப்பெருமான் விஸ்வரூபம் எடுத்ததாக கேட்டு இருக்கிறாயா? கேட்டு இருக்க முடியாது. ஆகா! அற்புதமான காட்சியடா! இப்பொழுதும் அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. 1547 ஆண்டுகளுக்கு முன் நடந்த அற்புதமான விஷயத்தைதான் இப்பொழுது நான் சொல்கிறேன். அந்த கருடன் விஸ்வரூபம் எடுத்த இடம். ஆகவேதான் கருட ஆழ்வாருக்கு இங்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. எவ்வளவு புனிதமான நாள் தெரியுமா இன்று? ஆகவேதான் அகத்தியன் உங்கள் அனைவரையும் வரச்சொன்னேன், இந்த வரலாற்றை சொல்லி "எவ்வளவு புண்ணிய பூமி இது தெரியுமா". இங்கு உட்கார்ந்து படிக்கின்ற இடத்துக்கு அடியிலே, மிகப் பெரிய "புளிய மரம்" இருக்கிறது. அந்தப் புளியமரத்தில் கீழே 108 கிளைகள் உண்டு.  108 கிளைகளிலும் 108 தெய்வங்கள் இருக்கிறது. 108 மாமுனிவர்கள் அங்கே இருக்கிறார்கள்.108 மூலிகைகள் இருக்கிறது. உயிர் காக்கும் மூலிகைகள். உயிர் காக்கும் மூலிகை பற்றி எல்லாம் அகத்தியன்  சொல்லியிருந்தேன். கண் இல்லாதவனுகெல்லம் கண் வந்த இடம் இது. கை கால் இழந்தவர்களுக்கெல்லாம் கை கால் கொடுத்த மூலிகை இங்கு இருக்கிறது. அந்த மூலிகையின் சாற்றை பிழிந்து, வேப்பமரத்தின் அடியில் வைத்து, அதோடு செந்தூரம் கலந்து சிறிது பாதரசத்தை கலந்து, வணங்கா முடி என்கிற அற்புத மூலிகை, 240 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வளரும். அந்த செடியின் வேர்களை பிழிந்து சார் எடுத்து ஆங்கொரு வேப்பமர பொந்தில் உள்ளே வைத்து பசும் சாணத்தால் மூடி வைத்து, 32 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் அந்த மூலிகை அற்புதமாக இருக்கும். அந்த மூலிகையை ஒரு துளி, ஒரு அணு அளவு யார் உட்கொண்டாலும், அவர்களுக்கு மூப்பு நரை என்பது வராது. தோல்கள் சுருங்காது. கண்களும், இமைகளும் பளிச்சென்று இரவில் கூட ஆந்தை போல தெரியும். ஒரு மனிதனின் உடலில் மொத்தத்தில் உள்ள நரம்புகள் 7747. இதில் வரக்கூடிய நோய்கள் 4148. அகத்தியன் ஏதேனும் பொய் கணக்கு சொல்கிறேன் என்று எண்ணக் கூடாது. முடிந்தால் நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வட கிழக்கு திசையில் இருக்கும் 8 வது கல்லை புரட்டி பார். அங்கு மனிதன் உடலிலே உள்ள வியாதிகள், "அச்" என்று தும்முவது முதல் கண்டமாலை என்னும் கொடிய நோய். அத்தனையும் சேர்த்து வைத்தது ஒரு மனிதனுக்கு உடலில் வருகின்ற நோய்கள் 4148. அத்தனை வியாதிகளையும் போக்குகிற வல்லமை இந்த மூலிகைக்கு உண்டு. அந்த மூலிகை, இந்த கோவிலுக்கு கீழே 48 அடிக்கு மேலே தோண்டிப் பார்த்தால் ஒரு அழகான செடி இன்றைக்கும் பசுமையாக இருக்கும். அகத்தியன் பொய் கணக்கு சொல்லவில்லை, மந்திர ஜாலம் காட்டவில்லை. பயமுறுத்தவில்லை. ஆக உங்களை எல்லாம் ஏமாற்றவில்லை. இன்றைக்கு இந்த பூமியிலே தாமிர பரணி நதிக்கரையிலே, வற்றாத ஜீவ நதிக்கரை ஓரத்திலே அந்த மூலிகை வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு, யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமோ, அகத்தியன் யாம் அறியேன்! ஆனால் அந்த மூலிகை சாற்றை உண்டு தான் மாமுனிவர்கள், ரிஷிகள், முனி புங்கவர்கள் எல்லாம் ஆண்டாண்டு காலமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அகத்தியன் கூட இருக்கும் 205 சித்தர்களும் அந்த மூலிகையின் பயனை பெற்றவர்கள்.  400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மூலிகையை உட்கொண்டவர்களுக்கு எல்லாம் இன்னும் 400 ஆண்டுகளுக்கு வாழ்க்கை இருக்கும். மனிதர்களுக்கு ஏன் அப்படி வாழ்க்கை இல்லை என்றால், அவர்கள் செய்கின்ற பாபங்கள், அவர்களாகவே ஏற்றுக்கொண்ட சட்டங்கள். இவர்களே இறைவனுக்கு போடுகின்ற கட்டளைகள், இறைவனுக்குப் பிடிப்பதில்லை. 

இங்கு மிகப் பெரிய நந்தவனமாக இருந்த போது, செல்வ செழிப்போடு இருந்தது இந்த பூமி. முக்கண்ணனும், இன்னும் தெய்வங்களும், பல பிரம்மாவும் ஒன்றுகூடி உலாவந்த இடம் இது. ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், ஆக இரண்டு மாதங்கள் அத்தனை தெய்வங்களும் இங்கு கூடி, ஒன்றாக ஆனந்தப்பட்டு, அழகாக சமைத்த அமுதத்தை ஒரு கவளம் உட்கொண்டு ஆனந்தப்பட்ட அற்புதமான நாள் இது. அன்றெல்லாம், அதற்குப் பிறகுதாண்டா, இந்த நதிக் கரை ஓரத்தில் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து அந்த ஆடி தோறும், அந்த ஆடி அமாவாசையோ, ஆடி பெருக்கன்றோ, கை ஊட்டி சாப்பிடுவார்களே, கை பிசைந்து சாப்பிடுவார்களே, அந்தப் பழக்கம் ஏற்பட்ட நாளும், இதே நாள் தாண்டா. அன்றைக்கு முக்கண்ணனும், பெருமாளும், பிரம்மாவும், இன்னும் சரஸ்வதி போன்ற தெய்வங்களும் ஒன்றாக அமர்ந்த காட்சிதான் இப்பொழுது அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. அந்த இடத்துக்கு மேலே நான் அமர்ந்து கொண்டு, அகத்தியன் நான் செப்புகிறேன். அவர்களை வணங்கிவிட்டுதான் விஷயத்தை சொல்லுகிறேன். புனிதமான இடம் கார்கோடக நல்லூர். கார்கோடகம் என்றால் விஷம். அந்த கார்கோடகனையே நல்லவனாக மாற்றிய நாளும் இதே நாள் தான். சற்று முன் சொன்னேனே! கருடன் வந்து விஷத்தை எடுத்தார் என்று. அப்பொழுதுதான் விஷ்ணுவும் இங்கு வந்து தரிசனம் கொடுத்தார். அந்த விஷ்ணு தரிசனம் கொடுத்த அந்த நன் நாள், இந்நாள். இங்குதான் விஷ்ணு, 1744 வருடங்களுக்கு முன் தோன்றி பச்சை வண்ணனாக அமர்ந்து, சிலையாக அமர்ந்தார். அந்த நாளும்,இதே நாள் தான். இந்த பெருமாளுக்கு முதலில் பச்சை வண்ணன் என்று தான பெயர். அதற்கு பிறகு பழக்க வழக்கத்தில் வேறு மாதிரி பிரம்மா என்று ஆகிவிட்டது. பிரம்மாவும் கூட இருந்ததால் பிரம்ம சொரூபம் என்று பார்த்தார்கள். பிறகு மாதாவாய் நினைத்துப் பார்த்தார்கள். ஆகவே எல்லாமாக கலந்து தான் கடைசியாக "ப்ரஹன் மாதாவாக" மாறிவிட்டது. இது வழக்குச்சொல் தவிர உண்மையிலேயே பச்சைவண்ணன் தான். விஷ்ணு பகவான் ஆசைப்பட்டு அமர்ந்த இடம். யாருக்கு இந்த பாக்கியம் இருக்கிறதோ அவர்களுக்கு இன்னும், இப்பொழுது சொல்கிறேன். அவர்கள் செய்த பாபங்கள் எல்லாம், 1/3 சதவிகிதம் இப்பொழுதே விலகிவிட்டது. இங்கு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் அந்த வாய்ப்பை அகத்தியன் நான் சந்தோஷமாக தாரை வார்த்துத் தருகிறேன். அது மட்டுமல்ல, தொடர்ந்து பிரார்த்தனை செய்து, இன்னொரு பலனையும் இவர்கள் பெறப்போகிறார்கள். ஏற்கனவே, முன் ஜென்மத்து தோஷங்கள் இருந்தால், அதன் காரணமாக மனதாலோ, உடலாலோ வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால், குடும்பம் செழிக்காமல் இருந்தால், வாழ்க்கையில் நொந்து நூலாகிக்கொண்டிருந்தால், அத்தனை வியாதிகளும் தோலிலோ, உடலிலோ இருந்தால், அவை அத்தனையும் போகக்கூடிய நல்ல நாள் இந்த நாள் என்பதால் அந்த தோஷத்தையும் அகத்தியன் ப்ரஹன் மாதா சார்பில், விஷ்ணுவின் சார்பிலும், என் அருகே இருக்கிற 204 சித்தர்கள் சார்பிலும் அவர்களுக்கும் அந்த வாய்ப்பை தந்து தாரை வார்த்துக் கொடுக்கிறேன். தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அற்புதமான காலம். எப்போதைக்கு எப்போது அகத்தியன் தாரை வார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டானோ, தன்னுடைய பொருள்களை உங்களிடம் ஒப்படைத்ததாக அர்த்தம்.

4000 ஆண்டுகளாக அகத்தியன் தவமிருந்த காலம். பல பிரளயங்களை கண்டவன் நான். இன்று வரை பிரளயம் கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒருவர் காக புசுண்டர், மற்றொருவர் அகத்தியர். அகத்தியனுக்கு சர்வ வல்லமை உண்டடா. அகத்தியன் ஏதோ சிவ மைந்தன் என்று, சிவனை சேர்ந்தவன் என்றோ மட்டும் எண்ணக் கூடாது. முருகப்பெருமான் அவதாரம் என் குருவாக என்றாலும் கூட, அவரை குருவாக நானாக ஏற்றுக்கொண்டேன். சிவபெருமான் அவரின் 75 விழுக்காடு அதிகாரத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். விஷ்ணுவோ, கேட்கவே வேண்டாம். பஞ்சணையில் அமர்ந்தபடி, பாற்கடலில் படுத்தபடியே, மஹாலக்ஷ்மியின் கையை பிடித்து தன் கை மீது வைத்து, பால் ஊற்றி அத்தனை பொறுப்பையும் எனக்கு கொடுத்து விட்டிருக்கிறார். விஷ்ணு என்ன கார்யம் செய்வாரோ, அதை என்னால் செய்ய முடியும். ஏன் என்றால் அவரிடமிருந்து முழ பொறுப்பையும் நான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்த நல்ல நாளும் இந்த நாள்தாண்டா. எத்தனை காரணங்கள் இங்கு நடந்திருக்கிறது. எத்தனை அதிசயங்கள் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியுமாடா. வரலாறு தெரியாமல் பேசுவதை நான் பார்க்கிறேன். வரலாற்றை 4000 ஆண்டுகளாக கண்டவன் நான். அதனால் தான் சொல்கிறேன், விஷ்ணு, மகாலக்ஷ்மியின் கையை பிடித்து,பாற்கடலில் உறையும் அமுதத்தை ஊற்றி தாரை வார்த்து "எனது சகல விதமான சௌபாக்கியங்களையும், நீ யாருக்கு விரும்புகிறாயோ எப்படிவேண்டுமானாலும் கொடு.  நான் ஒருபோதும் உன் விஷயத்தில் தலையிடமாட்டேன். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

பிரம்மாவும் சரஸ்வதியும் ஓடோடி வந்து 

"அகத்தியா! நான் என்ன உனக்கு தரவேண்டும்" என்று கேட்டார்.

"நான் என்ன செய்யப் போகிறேன். நான் ஒரு சித்தன் தானே." என்றேன்.

"இல்லை! இல்லை! எங்களின் சார்பாக, மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஏதேனும் கல்வியில் மோசமாகவோ, ஆரோக்கியத்தில் குறைவாக இருந்தால், ஆக இன்னும் பல விதிகளில் ஏதேனும் தவறு செய்திருந்தால், மூளை வளர்ச்சி குறைகள் இருந்தால், உடல் நடக்க முடியாமல், கை கால் விளங்காமல் இருந்தால், அது மட்டுமல்ல வாய் பேசாமல் இருந்தால், கண் பார்வை இல்லாமல் இருந்தால், இது போல் அங்க அவயவங்கள் இருந்து பிரயோசனம் இன்றி இருந்தால், அவர்களுகெல்லாம் எங்கள் சார்பாக, நான் படைத்தவன், படைத்ததற்கு காரணம் உண்டு.ஏன் அப்படி படைத்தேன் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் என்னுடைய படைப்பின் ரகசியத்தை எல்லாம் உனக்கு தருகிறேன். நீ விரும்பினால் அவர்களின் தலை விதியை மாற்று" என்று சொன்ன நல்ல நாளும் இந்நாள் தாண்டா. ஆகவே எவ்வளவு பெரிய நல்ல சம்பவங்கள் இந்த பூமியில் நடை பெற்று இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

தொடரும்!

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 1


[இந்த தொகுப்பு "சித்தன் அருள்" வலைப்பூவில் வந்தது. தொகுப்பாளர் அனுமதியுடன் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.அகத்தியர் மைந்தன் நாடி வாசித்த பொழுது தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது.]

நாடி வாசிக்கும் என்னை பலமுறை, பல இடங்களுக்கு அகத்திய பெருமான் செல்ல சொல்வது உண்டு.  ஏன் எதற்கு என்பதறியாமலே அவர் சொன்ன இடங்களுக்கு செல்வேன். ஆனால் அங்கு அவர் நடத்திகாட்டுகிற விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை வரவழைக்கும். மந்த்ராலயம், ரண மண்டலம்,திருப்பதி, பத்ராசலம், அஹோபிலம், ஈரோடுக்கு அருகிலுள்ள சிவ பெருமான் உறையும் மலை,  போன்ற இடங்களை பற்றி முன்னரே சொன்னதுண்டு. அப்படித்தான், ஒரு குறிப்பிட்ட நாளை தேர்ந்தெடுத்து, இன்னார் இன்னாரை அழைத்துக்கொண்டு செல், அங்கு நாம் நிறைய விஷயங்களை உரைப்போம் என்றார்.  என்ன என்று திகைத்து போனாலும், அவர் சொல்லை சிரம் மேற்கொண்டு நடத்தி, நானும் என் நண்பர்கள் புடைசூழ கிளம்பி சென்றேன். என்னுடன் வந்தவர்கள் அனைவரும் எத்தனை பாக்கியசாலிகள் என்று பின்னர் தான் புரிந்தது.

என்னை கிளப்பிவிட்டு போகச்சொன்னது திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். வெளியே தெரியாத எத்தனையோ கிராமங்களில் அதுவும் ஒன்று. அதன் பெயர் "கோடகநல்லூர்". அங்கு இரண்டு கோவில்கள் இருக்கிறது. கிராமத்தின் தொடக்கத்தில் சிவ பெருமானின் கோவிலும், கிராமத்தின் மறு கோடியில் "ப்ரஹன் மாதர்" என்றழைக்கப்படுகிற பெருமாள் கோவிலும். நாங்கள் சென்றமர்ந்தது "கோடகநல்லூர் ப்ரஹன் மாதர்" கோவில்.

அன்றைய தினம் 31-10-2009. சனிக்கிழமை, உத்திரட்டாதி நட்சத்திரம்,  சுக்ல பக்ஷ த்ரயோதசி திதி.

(இந்த வருடம் நவம்பர் 14ம் தியதி வருகிறது)

அகத்தியர் உத்தரவின் பேரில் ஒரு சிறு சன்னதியை தேர்ந்தெடுத்து, அனைவரும் அமர்ந்திருக்க, நாடியை புரட்டினேன்.  அதில் வந்து அகத்தியர் கூறிய விஷயங்கள் மிகுந்த ஆச்சரியத்தை ஊட்டுவதாக இருந்தது.

அகத்தியப் பெருமான் கூறியதை அவர் மொழிந்தது போலவே பார்க்கலாம்.

"ஐப்பசி மாதம் உத்திரட்டாதி உதித்துவிட்ட வேளையிலே, ஓர் கோவில் பற்றி, எதிர்கால நிலைபற்றி, கடந்த கால வரலாற்றைப்பற்றி, அகத்தியன் யாம் 6000 ஆண்டுகளாக இந்த கோவிலை சுற்றி சுற்றி வந்தவன் என்ற முறையில் அகத்திலிருந்து வார்த்தை சொல்கிறேன். முன்பொரு சமயம் இதே நாளில், இதே நட்சத்திரத்தில், இதே நேரத்தில், அகத்தியன், பக்கத்தில் ஒரு நந்தவனத்தில் குடி கொண்டு அங்கு உள்ள பரப்ரஹ்மம் என்று சொல்லக்கூடிய வேங்கடவனுக்கு, அகத்தியன் அபிஷேகம் செய்த புண்ணிய நாளடா இது. இல்லை என்றால் அகத்தியன் ஏனடா இங்கு வரப்போகிறேன். ஆக முன் ஜென்மத்தில், இதே நாளில், இதே நட்சத்திரத்தில் இதே நேரத்தில் அருமை மிகு என் அப்பன் சனீச்வர பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று அகத்தியன் வேங்கடவனுக்கு அபிஷேகம் செய்த அற்புதமான நாளடா. அதை நினைவு கூறுகிற எண்ணத்தில் தான் அகத்தியனே இங்கு ஏகினோம், நாள் குறித்துக் கொடுத்தோம். ஆகவே, ஆங்கோர் சர்ப்பம் ஒன்று அமையப்போகிறது இங்கு ஆனந்தமாக. இந்தக் கோயிலின் வரலாற்றை இதுவரை, யாருமே சரியாக எழுதினது கிடையாது. 1747 ஆண்டுகளுக்கு முன் இந்த இடம் மிகப் பெரிய நந்தவனமாக இருந்தது. சித்தர்கள் மட்டுமல்ல, முனிவர்கள், மகா முனிவர்கள், முனி புங்கவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஆனந்தமாக இறைவனை வழிபட்ட நல்ல நாள் இது. ஆகவே இந்த புண்ணிய ஸ்தலத்தில் வந்து, தாமிரபரணி நதிக்கரை ஓரமாக அமர்ந்து இந்த வார்த்தைகளை சொல்வதற்கு காரணமிருக்கிறது.  

நிறைய பேருக்கு தெரியாது.  இன்று லோபாமுத்திரை என்று சொல்லக்கூடிய, என்னுடன் இருக்கின்ற மனைவியின் பெயராக உச்சரிக்கின்றனர். லோபாமுத்திரை யார் என்ற கேள்வி இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. அவள் யார்? பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது.  எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா? ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா? பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே.  இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் தான் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன். இன்றைய தினம் இதோ இந்த இடத்தில் தான் இருக்கிறேன். ஏன் என்றால் இரண்டு ஜென்மங்களுக்கல்ல; 1800 ஆண்டுகளுக்கு முன் இங்கோர் நந்தவனம் அமைத்து, என்பெருமானுக்கு அபிஷேகம் செய்த தினம் இன்று என ஏற்கனவே சொன்னேனே. அதையும் ஞாபகப் படுத்திக்கொள். தாமிரபரணி நதிக்கரையை, லோபமுத்திரையாக்கி என் அருகில் வைத்துக் கொண்டிருக்கிறேனே,  அந்த அற்புதமான நிகழ்ச்சி நடந்த நாளும் இதே உத்திரட்டாதி நட்சத்திரத்தன்றுதான், இதே நாள். முன்ஜென்மத்தில் ஏறத்தாழ 1477 ஆண்டுகளுக்கு முன்பு, நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சொல்லத்தான் இங்கு வந்திருக்கிறேன். ஆக அகத்தியன் உலாவிக்கொண்டிருக்கிறேன். அகத்தியன் மட்டுமல்ல, என்னுடன் இருக்கின்ற 205 சித்தர்களும் இங்கு உலாவிக் கொண்டு இருக்கிறார்கள். அது மிகப் பெரிய விசேடமடா. இதுவரை அகத்தியனுக்கு 18 சித்தர்கள் என்று தான் பெயர். அகத்தியனை தலையாய சித்தர் என்று சொல்வார்கள். சிவ மைந்தன் என்று சொல்வதுண்டு. சிவ மைந்தன் என்பது ஒரு புறம் இருக்க; நான் அக்னியில் உண்டானவனடா! சிவனுக்கு கண்ணிலோ, நெற்றியிலோ உண்டானவன் அல்ல. சிவன் செய்த யாகத்தினால் உண்டாக்கப்பட்டவன் நான். ஆகவே சிவ மைந்தன் என்று சொல்வார்கள். 

சிவன் மட்டுமல்ல, விஷ்ணுவும் தங்கள் அதிகாரத்தை அகத்தியன் ஆன என்னிடம் ஒப்படைத்த நாளும் இந்த நாள் தான். இந்த நாள் எத்தனை விசேடமான நாள் என்று சொல்லத்தான், உங்கள் அனைவரையும் தாமிர பரணி நதிக்கரைக்கு வரச்சொன்னேன். ஆகவே, இந்த நாளில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. ஒன்று, அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான். தாமிரபரணி நதிக்கரையை லோபாமுத்திரையாக மாற்றிய நாள் இந்த நாள். அது மட்டுமல்ல, இந்த கோவிலுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு,அது சரியாக எழுதப்படவில்லை என்று சொன்னேன்.குறை சொல்வதற்காக அல்ல. குறையே அல்ல இது.

ஒரு சமயம், அசுரனாக இருக்கின்ற ஆதிசேஷனும், கார் கோடகனும் கொடி கட்டி பறந்த காலம். மிகப் பெரிய முனிவரின் மூன்று வயது குழந்தையை ஆதிசேஷன் கொத்திவிட்டதால், உயிர் துறக்கும் நேரத்தில், முனிவர்கள் துதித்தார்கள். "பெருமாளே இத்தனை நாள் உனக்கு அபிஷேகம் செய்தேனே, ஒரு விஷ பாம்பு என் குழந்தையை கொன்று விட்டதே! குழந்தையை உயிர்பித்து தரமாட்டாயா? என்று முனிவர் அவர் கேட்டார்.  அப்பொழுது அகத்தியன் நான் கூட இருந்தேன். அந்த நேரத்தில் தான் கருடன் இங்கே வந்தான். கருடனை பார்த்ததும் பாம்பது ஓடியது. கருடனே தன் மூக்கால் விஷத்தை எடுத்த நாளும், இந்த புண்ணிய நாள்தாண்டா. எவ்வளவு பெரிய அதிசயங்கள் நடந்திருக்கிறது தெரியுமா? யாருக்கு தெரியும் இந்த வரலாறு. ஆகவே எந்த கோவிலும் இல்லாத சிறப்பு இந்த கோவில் கருடனுக்கு இருக்கிறது. இந்த கருடனுக்கு அபிஷேகம் நடக்கிற காரணமே இது தானடா. விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை "கருடன்" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. இது நடந்தது ஏறத்தாழ 1377 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் தான். இந்த ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம் அத்தனை விசேஷமான நாள் தான். எவ்வளவு பெரிய வரலாற்றை எல்லாம் சுமந்து கொண்டிருக்கிறது இந்த புண்ணிய பூமி என்பது தெரியுமா?

இங்கு ஒன்று சேர்ந்திருக்கும் இவர்கள் அந்த காலத்தில் ஒரு நீராடி மண்டபத்தை கட்டியிருக்கிறார்கள். நீராடி மண்டபத்தை மட்டுமல்ல, பொய்கை குளத்தை கட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கண்ணாடி பல்லக்கு என்று சொல்லக்கூடிய, தங்கப் பல்லக்கை கட்டியிருக்கிறார்கள். இந்த கோயிலுக்கு ஏற்கனவே, 300 ஏக்கர் நஞ்சையும், 300 ஏக்கர் புஞ்சை நிலமும் உண்டு. மாமரம், தென்னை மரம், பலா மரம் போன்ற மரங்களும், மொத்தத்தில் அகத்தியன் கணக்குப் படி பார்த்தால் இந்த நெல்லை மாவட்டத்தின் நுனி வரை பொதிகை மலையின் அடிவாரம் வரை இந்த கோயிலுக்கு சொந்தம். இந்த கோயிலுக்கு சொந்தமாக, வல்லபாய குலோத்துங்க சோழன் என்ற மன்னன் கோயிலுக்காக பட்டயம் எழுதிக் கொடுத்திருக்கிறான். இந்த கோயிலில் அன்று முதல் இன்று வரை பரம்பரை தர்மகர்த்தாக்கள் என்று சொல்லக்கூடியவர்களின் வாரிசுகள்தான் இன்றைக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள்.  இவர்கள் எல்லாம் அநபாய சோழன், குலோத்துங்க சோழ அரசவையிலிருந்து இந்தக் கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருந்தவர்கள். இந்த கோவிலை நிர்வாகித்துக் கொண்டிருக்கும் போதுதான் அங்கமெல்லாம் அபிஷேகம்,  அன்றாடம் ஆறுகால பூஜை நடந்த அறுபுதமான இடம் இது. அதுமட்டுமல்ல, இந்த கோயிலுக்காக, இந்த வம்சம் நல்லபடியாக தழைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, மூன்றே மூன்று பேர்கள் தான் இங்கு மாறி மாறி வரும். ஒன்று கிருஷ்ணஸ்வாமி  என்று வரும்.இன்னொன்று ஸ்ரீநிவாசன் என்று வரும். இன்னொன்று திருவேங்கடாச்சாரி என்று வரும். திருவேங்கடாச்சாரி என்பது பின்னர் ராமசாமி என்று மாற்றப்பட்டது. இந்த பரம்பரை நிர்வாகத்துக்காக, அநபாய சோழனும், குலோத்துங்க சோழனும் எழுதிகொடுத்த பட்டயம் இந்த கோயிலின் வடகிழக்கு திசையில் 40 அடிக்கு கீழே இருக்கிறது. அந்த செப்பு பட்டயத்தை எடுத்துப் பார்த்தால், எத்தனை நிலங்களை காணிக்கையாக கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அத்தனை காணிக்கையும் பெற்று தான் அறங்காவலர்கள் இந்த கோவிலை நடத்தி வந்துள்ளனர். 

ஆகவே, கோடகன் என்பவன் கொடிய விஷம் கொண்டவன். அவன் மூச்சு விட்டாலே முன்னூறு காதம் (மைல்) விஷம் பரவி அனைத்தும் இறக்கக்கூடும். அவ்வளவு கடுமையான விஷத்தை உடைய  "கார் கோடகன்" குடியிருந்த இடம். அவன் அரசாட்சி செய்து கொண்டிருந்த இடம். அவனை யாரும் நெருங்க முடியாமல், அரக்கர்களின் உச்சகட்ட ஆட்சி நடந்து கொண்டிருந்த இடம். அங்கு தான் பராசரமுனிவரும், பரஞ்ஜோதி முனிவரும், இன்னும் பல முனிவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த அரக்கனின் பலத்தை குறைப்பதற்காக கடும் தவம் இயற்றி வேங்கடவனை வணங்கினார்கள். வேங்கடவனே "ப்ரஹன் மாதா" என்கிற பேரிலே வந்தமர்ந்தான். ப்ரஹன் மாதவுக்கும் அந்த சோதனை எற்பட்டதடா. அவனையும் அரக்கன் விடவில்லை, சுற்றி வந்தான். மூச்சுவிட்டான். ஒன்றும் நடக்கவில்லை. அதன் காரணமாக தன்னை பச்சை நிறமாக மாற்றிக்கொண்டான் வேங்கடவன். கார்கோடகன் என்று சொல்லக்கூடிய அரக்கன் ப்ரஹன் மாதாவை தீண்ட முயற்ச்சித்தான். ப்ரஹன் மாதா பச்சை நிறத்தில் ஜொலித்தான். பச்சை என்பது பசுமையடா. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.

தொடரும்!

கோடகநல்லூர் பச்சைவண்ணப் பெருமாள் கோவில் - இரவு நேரக் காட்சி!



கோடகநல்லூர் ப்ரஹன்மாதவர் (பச்சை வண்ணப் பெருமாள்)


[ பெருமாள் திருமஞ்சன பூஜை ]


[ மூலவரும் உற்சவரும் ]