Wednesday 7 September 2016

கோடகநல்லூர் - அகத்தியர் ஜீவநாடியில் வந்த தகவல் - 2

அதற்கு முன்னால் பச்சைக்கும்  விஷ்ணுவுக்கும் சம்பந்தம் கிடையாது. புதனுக்கும், விஷ்ணுவுக்கும் சம்பந்தம் இருந்ததாக வரலாறே இல்லை. அத்தனையும் தாண்டித்தான், பச்சை என்றால் விஷ்ணு. விஷ்ணு யாரிடம் இருக்கிறாரோ அவனை விஷம் அண்டாது, அதற்கு கார்கோடகன் தான் ஒரு காரணம். ஏறத்தாழ 727 ஆண்டுகள் அந்த கார்கோடகன் ஆட்சி செய்த இடம், இது. ஏகப்பட்ட பேருக்கு தொல்லை கொடுத்த இடம். தன் பக்கம், இந்தப் பக்கமாக நல்லவர்கள் யாருமே வரக்கூடாது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு இருந்த இடம். தவமுனி தன் குழந்தை இறந்து விட்ட காரணத்தினால் கண்ணீர் விட்டு அழுத போது, கருடப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த இடம். எங்காவது, கருடப்பெருமான் விஸ்வரூபம் எடுத்ததாக கேட்டு இருக்கிறாயா? கேட்டு இருக்க முடியாது. ஆகா! அற்புதமான காட்சியடா! இப்பொழுதும் அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. 1547 ஆண்டுகளுக்கு முன் நடந்த அற்புதமான விஷயத்தைதான் இப்பொழுது நான் சொல்கிறேன். அந்த கருடன் விஸ்வரூபம் எடுத்த இடம். ஆகவேதான் கருட ஆழ்வாருக்கு இங்கு மிகப் பெரிய மரியாதை உண்டு. எவ்வளவு புனிதமான நாள் தெரியுமா இன்று? ஆகவேதான் அகத்தியன் உங்கள் அனைவரையும் வரச்சொன்னேன், இந்த வரலாற்றை சொல்லி "எவ்வளவு புண்ணிய பூமி இது தெரியுமா". இங்கு உட்கார்ந்து படிக்கின்ற இடத்துக்கு அடியிலே, மிகப் பெரிய "புளிய மரம்" இருக்கிறது. அந்தப் புளியமரத்தில் கீழே 108 கிளைகள் உண்டு.  108 கிளைகளிலும் 108 தெய்வங்கள் இருக்கிறது. 108 மாமுனிவர்கள் அங்கே இருக்கிறார்கள்.108 மூலிகைகள் இருக்கிறது. உயிர் காக்கும் மூலிகைகள். உயிர் காக்கும் மூலிகை பற்றி எல்லாம் அகத்தியன்  சொல்லியிருந்தேன். கண் இல்லாதவனுகெல்லம் கண் வந்த இடம் இது. கை கால் இழந்தவர்களுக்கெல்லாம் கை கால் கொடுத்த மூலிகை இங்கு இருக்கிறது. அந்த மூலிகையின் சாற்றை பிழிந்து, வேப்பமரத்தின் அடியில் வைத்து, அதோடு செந்தூரம் கலந்து சிறிது பாதரசத்தை கலந்து, வணங்கா முடி என்கிற அற்புத மூலிகை, 240 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வளரும். அந்த செடியின் வேர்களை பிழிந்து சார் எடுத்து ஆங்கொரு வேப்பமர பொந்தில் உள்ளே வைத்து பசும் சாணத்தால் மூடி வைத்து, 32 நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் அந்த மூலிகை அற்புதமாக இருக்கும். அந்த மூலிகையை ஒரு துளி, ஒரு அணு அளவு யார் உட்கொண்டாலும், அவர்களுக்கு மூப்பு நரை என்பது வராது. தோல்கள் சுருங்காது. கண்களும், இமைகளும் பளிச்சென்று இரவில் கூட ஆந்தை போல தெரியும். ஒரு மனிதனின் உடலில் மொத்தத்தில் உள்ள நரம்புகள் 7747. இதில் வரக்கூடிய நோய்கள் 4148. அகத்தியன் ஏதேனும் பொய் கணக்கு சொல்கிறேன் என்று எண்ணக் கூடாது. முடிந்தால் நீங்கள் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு சென்று வட கிழக்கு திசையில் இருக்கும் 8 வது கல்லை புரட்டி பார். அங்கு மனிதன் உடலிலே உள்ள வியாதிகள், "அச்" என்று தும்முவது முதல் கண்டமாலை என்னும் கொடிய நோய். அத்தனையும் சேர்த்து வைத்தது ஒரு மனிதனுக்கு உடலில் வருகின்ற நோய்கள் 4148. அத்தனை வியாதிகளையும் போக்குகிற வல்லமை இந்த மூலிகைக்கு உண்டு. அந்த மூலிகை, இந்த கோவிலுக்கு கீழே 48 அடிக்கு மேலே தோண்டிப் பார்த்தால் ஒரு அழகான செடி இன்றைக்கும் பசுமையாக இருக்கும். அகத்தியன் பொய் கணக்கு சொல்லவில்லை, மந்திர ஜாலம் காட்டவில்லை. பயமுறுத்தவில்லை. ஆக உங்களை எல்லாம் ஏமாற்றவில்லை. இன்றைக்கு இந்த பூமியிலே தாமிர பரணி நதிக்கரையிலே, வற்றாத ஜீவ நதிக்கரை ஓரத்திலே அந்த மூலிகை வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதற்கு, யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்குமோ, அகத்தியன் யாம் அறியேன்! ஆனால் அந்த மூலிகை சாற்றை உண்டு தான் மாமுனிவர்கள், ரிஷிகள், முனி புங்கவர்கள் எல்லாம் ஆண்டாண்டு காலமாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது அகத்தியன் கூட இருக்கும் 205 சித்தர்களும் அந்த மூலிகையின் பயனை பெற்றவர்கள்.  400 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மூலிகையை உட்கொண்டவர்களுக்கு எல்லாம் இன்னும் 400 ஆண்டுகளுக்கு வாழ்க்கை இருக்கும். மனிதர்களுக்கு ஏன் அப்படி வாழ்க்கை இல்லை என்றால், அவர்கள் செய்கின்ற பாபங்கள், அவர்களாகவே ஏற்றுக்கொண்ட சட்டங்கள். இவர்களே இறைவனுக்கு போடுகின்ற கட்டளைகள், இறைவனுக்குப் பிடிப்பதில்லை. 

இங்கு மிகப் பெரிய நந்தவனமாக இருந்த போது, செல்வ செழிப்போடு இருந்தது இந்த பூமி. முக்கண்ணனும், இன்னும் தெய்வங்களும், பல பிரம்மாவும் ஒன்றுகூடி உலாவந்த இடம் இது. ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், ஆக இரண்டு மாதங்கள் அத்தனை தெய்வங்களும் இங்கு கூடி, ஒன்றாக ஆனந்தப்பட்டு, அழகாக சமைத்த அமுதத்தை ஒரு கவளம் உட்கொண்டு ஆனந்தப்பட்ட அற்புதமான நாள் இது. அன்றெல்லாம், அதற்குப் பிறகுதாண்டா, இந்த நதிக் கரை ஓரத்தில் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து அந்த ஆடி தோறும், அந்த ஆடி அமாவாசையோ, ஆடி பெருக்கன்றோ, கை ஊட்டி சாப்பிடுவார்களே, கை பிசைந்து சாப்பிடுவார்களே, அந்தப் பழக்கம் ஏற்பட்ட நாளும், இதே நாள் தாண்டா. அன்றைக்கு முக்கண்ணனும், பெருமாளும், பிரம்மாவும், இன்னும் சரஸ்வதி போன்ற தெய்வங்களும் ஒன்றாக அமர்ந்த காட்சிதான் இப்பொழுது அகத்தியன் கண்ணுக்கு தெரிகிறது. அந்த இடத்துக்கு மேலே நான் அமர்ந்து கொண்டு, அகத்தியன் நான் செப்புகிறேன். அவர்களை வணங்கிவிட்டுதான் விஷயத்தை சொல்லுகிறேன். புனிதமான இடம் கார்கோடக நல்லூர். கார்கோடகம் என்றால் விஷம். அந்த கார்கோடகனையே நல்லவனாக மாற்றிய நாளும் இதே நாள் தான். சற்று முன் சொன்னேனே! கருடன் வந்து விஷத்தை எடுத்தார் என்று. அப்பொழுதுதான் விஷ்ணுவும் இங்கு வந்து தரிசனம் கொடுத்தார். அந்த விஷ்ணு தரிசனம் கொடுத்த அந்த நன் நாள், இந்நாள். இங்குதான் விஷ்ணு, 1744 வருடங்களுக்கு முன் தோன்றி பச்சை வண்ணனாக அமர்ந்து, சிலையாக அமர்ந்தார். அந்த நாளும்,இதே நாள் தான். இந்த பெருமாளுக்கு முதலில் பச்சை வண்ணன் என்று தான பெயர். அதற்கு பிறகு பழக்க வழக்கத்தில் வேறு மாதிரி பிரம்மா என்று ஆகிவிட்டது. பிரம்மாவும் கூட இருந்ததால் பிரம்ம சொரூபம் என்று பார்த்தார்கள். பிறகு மாதாவாய் நினைத்துப் பார்த்தார்கள். ஆகவே எல்லாமாக கலந்து தான் கடைசியாக "ப்ரஹன் மாதாவாக" மாறிவிட்டது. இது வழக்குச்சொல் தவிர உண்மையிலேயே பச்சைவண்ணன் தான். விஷ்ணு பகவான் ஆசைப்பட்டு அமர்ந்த இடம். யாருக்கு இந்த பாக்கியம் இருக்கிறதோ அவர்களுக்கு இன்னும், இப்பொழுது சொல்கிறேன். அவர்கள் செய்த பாபங்கள் எல்லாம், 1/3 சதவிகிதம் இப்பொழுதே விலகிவிட்டது. இங்கு இருக்கிற அத்தனை பேர்களுக்கும் அந்த வாய்ப்பை அகத்தியன் நான் சந்தோஷமாக தாரை வார்த்துத் தருகிறேன். அது மட்டுமல்ல, தொடர்ந்து பிரார்த்தனை செய்து, இன்னொரு பலனையும் இவர்கள் பெறப்போகிறார்கள். ஏற்கனவே, முன் ஜென்மத்து தோஷங்கள் இருந்தால், அதன் காரணமாக மனதாலோ, உடலாலோ வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால், குடும்பம் செழிக்காமல் இருந்தால், வாழ்க்கையில் நொந்து நூலாகிக்கொண்டிருந்தால், அத்தனை வியாதிகளும் தோலிலோ, உடலிலோ இருந்தால், அவை அத்தனையும் போகக்கூடிய நல்ல நாள் இந்த நாள் என்பதால் அந்த தோஷத்தையும் அகத்தியன் ப்ரஹன் மாதா சார்பில், விஷ்ணுவின் சார்பிலும், என் அருகே இருக்கிற 204 சித்தர்கள் சார்பிலும் அவர்களுக்கும் அந்த வாய்ப்பை தந்து தாரை வார்த்துக் கொடுக்கிறேன். தாரை வார்த்துக் கொடுப்பது என்பது மிக அற்புதமான காலம். எப்போதைக்கு எப்போது அகத்தியன் தாரை வார்த்துக் கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டானோ, தன்னுடைய பொருள்களை உங்களிடம் ஒப்படைத்ததாக அர்த்தம்.

4000 ஆண்டுகளாக அகத்தியன் தவமிருந்த காலம். பல பிரளயங்களை கண்டவன் நான். இன்று வரை பிரளயம் கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒருவர் காக புசுண்டர், மற்றொருவர் அகத்தியர். அகத்தியனுக்கு சர்வ வல்லமை உண்டடா. அகத்தியன் ஏதோ சிவ மைந்தன் என்று, சிவனை சேர்ந்தவன் என்றோ மட்டும் எண்ணக் கூடாது. முருகப்பெருமான் அவதாரம் என் குருவாக என்றாலும் கூட, அவரை குருவாக நானாக ஏற்றுக்கொண்டேன். சிவபெருமான் அவரின் 75 விழுக்காடு அதிகாரத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். விஷ்ணுவோ, கேட்கவே வேண்டாம். பஞ்சணையில் அமர்ந்தபடி, பாற்கடலில் படுத்தபடியே, மஹாலக்ஷ்மியின் கையை பிடித்து தன் கை மீது வைத்து, பால் ஊற்றி அத்தனை பொறுப்பையும் எனக்கு கொடுத்து விட்டிருக்கிறார். விஷ்ணு என்ன கார்யம் செய்வாரோ, அதை என்னால் செய்ய முடியும். ஏன் என்றால் அவரிடமிருந்து முழ பொறுப்பையும் நான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்த நல்ல நாளும் இந்த நாள்தாண்டா. எத்தனை காரணங்கள் இங்கு நடந்திருக்கிறது. எத்தனை அதிசயங்கள் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியுமாடா. வரலாறு தெரியாமல் பேசுவதை நான் பார்க்கிறேன். வரலாற்றை 4000 ஆண்டுகளாக கண்டவன் நான். அதனால் தான் சொல்கிறேன், விஷ்ணு, மகாலக்ஷ்மியின் கையை பிடித்து,பாற்கடலில் உறையும் அமுதத்தை ஊற்றி தாரை வார்த்து "எனது சகல விதமான சௌபாக்கியங்களையும், நீ யாருக்கு விரும்புகிறாயோ எப்படிவேண்டுமானாலும் கொடு.  நான் ஒருபோதும் உன் விஷயத்தில் தலையிடமாட்டேன். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

பிரம்மாவும் சரஸ்வதியும் ஓடோடி வந்து 

"அகத்தியா! நான் என்ன உனக்கு தரவேண்டும்" என்று கேட்டார்.

"நான் என்ன செய்யப் போகிறேன். நான் ஒரு சித்தன் தானே." என்றேன்.

"இல்லை! இல்லை! எங்களின் சார்பாக, மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஏதேனும் கல்வியில் மோசமாகவோ, ஆரோக்கியத்தில் குறைவாக இருந்தால், ஆக இன்னும் பல விதிகளில் ஏதேனும் தவறு செய்திருந்தால், மூளை வளர்ச்சி குறைகள் இருந்தால், உடல் நடக்க முடியாமல், கை கால் விளங்காமல் இருந்தால், அது மட்டுமல்ல வாய் பேசாமல் இருந்தால், கண் பார்வை இல்லாமல் இருந்தால், இது போல் அங்க அவயவங்கள் இருந்து பிரயோசனம் இன்றி இருந்தால், அவர்களுகெல்லாம் எங்கள் சார்பாக, நான் படைத்தவன், படைத்ததற்கு காரணம் உண்டு.ஏன் அப்படி படைத்தேன் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் என்னுடைய படைப்பின் ரகசியத்தை எல்லாம் உனக்கு தருகிறேன். நீ விரும்பினால் அவர்களின் தலை விதியை மாற்று" என்று சொன்ன நல்ல நாளும் இந்நாள் தாண்டா. ஆகவே எவ்வளவு பெரிய நல்ல சம்பவங்கள் இந்த பூமியில் நடை பெற்று இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

தொடரும்!

1 comment: